திங்கள், 31 டிசம்பர், 2012

கண்ணாம் பூச்சி ( பொக்கிஷம்-5)

கனவான்களே ! சீமாட்டிகளே!
ஆந்தை தூக்கம் வந்த ஒரு இரவில் தாத்தாகொடுத்த தகரபெட்டியை உருட்டிய பொழுது கரயாண்களின் எச்சங்களுக்கு நடுவில் 1967 ல் வெளி வந்த நான் மிகவும் பாதுகாக்கும் பொக்கிஷம் தட்டுப்பட்டது.
குமுதம் வார இதழின்  ஒரு அங்கமான மாலைமதி யின் 10 வது பிரசவம் இது. 1967 செப்டம்பரில் வெளிவந்திருக்கிறது. மாலைமதியின் முதல் சித்திரக்கதை எது தெரியுமா! அப்புசாமி சீதாப்பாட்டியின் " காதல் காவலர் அப்புசாமி" என இதன் முந்தைய பட்டியலின் மூலம் அறிய முடிகிறது

அன்றய காலகட்டத்தில் மாலைமதியின் முதல் இதல் 40 பைசாவுக்கு வெளிவந்துள்ளது . அதன் பின்னர் 50 பைசாவிற்கு இரு இதழ்கள் வந்திருந்தாலும்  இந்த இதழ் 30 பைசாவுக்கு வெளிவந்துள்ளது. அந்த சமயத்தில் நமது கொள்ளூ தாத்தவுக்கும் எள்ளுத்தாத்தாவுக்கும் இது மிகப்பெரிய தொகையாகவும் அவர்களின் புதல்வர்கள் இதனை புத்தக கடையினில் மட்டும் ஆவலாய் பராக்க பார்த்த இதழாகவும் இருந்திருக்கும்.
 நண்பர்கள் யாரேனும் தமிழில் வந்த முதல் சித்திரக்கதை எது , அது எப்பொழுது வந்தது அதன் ஒவியர் மற்றும் ஆசிரியம் யார் என தெரியப்படுத்திட்டால் எனது தாத்தா கொடுத்த தகரப்பெட்டிக்கு அவர்கள் பெயரை வைத்து விடுவேன்:)



 











கதையின் பெயர் : கண்ணாம்பூச்சி
வெளிவந்த வருடம்: செப்டம்பர்-1967
விலை: 30 பைசா
வெளியீடு: மாலைமதி
ஆசிரியர்: குறிப்பு இல்லை
ஓவியர் : குறிப்பு இல்லை
 மொத்த பக்கங்கள் : 46 ( அட்டையுடன்)

திரையரங்கங்கள் சிற்றூர்களை அதிகம் எட்டிப்பிடிக்காத அந்த காலகட்டத்தில் மக்களின் பார்வை வார, மாத சஞ்சிகைகளின் மீது பதிந்திருந்தது . மேலும் சித்திரக்கதைகள் கைகளில் தவளுகின்ற மடிகணணி திரைப்படம் போல தோன்றுவதால் அன்றய பொழுது போக்கில் சித்திரக்கதைகளுக்கு மவுசு அதிகம்தான் . அதுவும் மூக்கை சிந்துகிற அளவிற்கு கண்ணீர் வரவழைக்கும் குடும்பக்கதை அமைந்துவிட்டால் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்...( இப்ப மட்டும் தினசரி அனைத்து  சேனல்களிலும் அதுதானே மெகாதொடர் என்ற பெயரில்வாழுது.. :( 
அந்த குடும்பகதை சூத்திரத்தில் உருவாககப்பட்டதுதான் இந்த சித்திரக்கதையும் .


இன்று இந்த கதையை படித்துபார்த்தால் நமது ஃபாஸ்ட் புட் ரசனைக்கு ஒத்துவராது என்பதால் கால எந்திரத்தில் பயனித்து 1967 ல் இருந்து கொண்டு .... முடிந்தால் இன்னும் பின்னோக்கி சென்று படிக்கிறேன். இருந்த போதிலும் நடு நடுவே அடைப்புக்குறியில்  2012 டிசம்பர் மாதத்து எனது மைண்ட் வாய்ஸ் முனகுவதை என்னால் தடுக்க முடியவில்லை 

கதைச்சுருக்கம்:


தனது அயோக்கிய முதலாளி  துரைவேலு தனது தங்கை கீதாவை காதலிப்பது அறிந்து அவனிடம் சண்டையிட்டு மூன்றான்று சிறைவாசம் அனுபவிக்கிறான் ரவி. சிறையிலிருந்து வெளிவரும் ரவி தனது பாசமலர் தங்கை அதே துரைவேலுவை திருமணம் செய்தது கண்டு அதிர்கிறான் மீண்டும் குழப்பம் சண்டை இப்போது துரைவேலுவின் தங்கை சுமதி  ரவியை காப்பாற்றுகிறாள் ( அட்டைப்படம்) . இதனை துரைவேலு பார்த்துவிடுகிறான் கோவத்தில் தனது தங்கையை அடிக்க ஆள் காலி ஆகிறாள்.  அந்த கோவத்தில் இரவில் துரைவேலுவை கொல்ல வருகிறான் ரவி, கடைசி நேரத்தில்  அட இது நமது தங்கையின் கணவராயிற்றே என கொலை செய்ய மறக்கும் வினாடியில் துரைவேலு விழித்துக்கொண்டு ரவியை துப்பாக்கியால் சுடுகிறான்.

அதிலிருந்து தப்பித்த ரவி மனம் நொந்து ( படிக்கும் நாம்  அல்லவா...) தற்கொலை செய்ய ரயில் பாதையில் தலை வைக்க அங்கு ஒரு குழந்தை கிடக்கிறது ( இன்னும் கதையை சொல்லித்தான் ஆகனுமா?)  அந்த குழந்தையை காப்பாற்றவாவது உயிர் வாழ நினத்து குழந்தையுடன் போர்ட்டர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்து வாழ்கிறான் .
வழக்கம் போல குழந்தையின் கழுத்தில் கிடக்கும் தாயத்தில் ஒரு முகவரி இருக்க அங்கு சென்று குழந்தை பற்றி கேட்க அந்த வீட்டு அம்மணி திரு திரு வென (நம்மைப்போல்) விழித்து ரவியை விரட்டுகிறாள் .
 ரவி திரும்பி செல்லாமல் வீட்டின் ஒரம் ஒளிந்து கொள்ள அதே சமயம் கீதா அங்கு வந்து அது துரைவேலுவின் முதல் மனைவியின் குழந்தை யென ஒரு புது விளக்கம் தருகிறாள் ( போதும் நிறுத்து ....)
மேலும்  முதல் மனைவியை துறத்திவிட்டு தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கதையையும் , அந்த குழந்தையை இது நாள்வரை இறந்துபோன துரைமுருகன் தங்கை வளர்த்ததாகவும் அந்தன் பிறகு இந்த குழந்தையை நோயில் இறந்துவிட்டதாகவும் கூறி எங்கோ தொலைத்து விட்டதாகவும் கூறுகிறாள் ( ஐயோ ... இப்பவுள்ள மெகா தொடர்களின் முன்னோடி இதுதானா?...)

என்றாவது ஒரு நாள் இப்படி நடக்குமென தெரிந்து முன்னெச்சரிக்கையாக தனது நண்பி மோகனா வீட்டு முகவரியை தாயத்தில் எழுதி வைத்ததாக கூறுகிறாள் கீதா.  அந்த சமயம் மறைவில் இருந்த குழந்தை மட்டும் தவழ்ந்துவந்து அவளிடம் சேருகிறது ( ஜானியின் இடியாப்ப சிக்கல் கதைகளே பரவாயில்லை...)


இரண்டு நாள் கழித்து தங்கை வீட்டுக்கு செல்லும் ரவி அங்கு வீடு காலிசெய்யப்பட்டிருப்பதை அறிகிறான்.அப்பொழுதுபார்த்து துரைவேலுவின் முதல் மனைவி அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்து ரவியால் காப்பாற்ற படுகிறாள் ( நெஞ்சு வலிக்குது...)

பல பக்கங்களுக்கு பிறகு அனைவரும் இறுதிக்காட்சியில் மோதிக்கொள்கிறார்கள் ( நாம் சுவற்றில் மோதிக்கொள்ளாத்துதான் குறை) கீதா இறக்க ரவி மீண்டும் சிறைக்கு போகிறான். இறுதியில் யார் யாருடன் சேர்ந்தார்கள் என்பதனை நீங்களே படத்தை பார்த்து புறிந்துகொள்ளுங்கள் ( அப்பாட ஆள விடுடா சாமி...)



இந்த கதை தொடராக வந்து பின்னர் முழுமையாக வந்ததன் அறிகுறிகள் தெரிகின்றன . ஆனால் இந்த கதை இன்றய மெகாதொடர் இயக்குனர் கைகளில் கிடைத்தால் 1000 எபிஸோட் தாண்டும் என்பது மட்டும் திண்ணம்.

வரைந்தது யார் என தெரியவில்லை என்றாலும் சித்திரங்கள் படு அமர்களமாக உள்ளன

நன்றி நண்பர்களே! இந்த ஆண்டின் இறுதிப் பதிவை முழுமையாக நீங்கள் படித்திருந்தால் (!) உங்கள் பொறுமைக்கு வீட்டில் சொல்லி திருஷ்டி சுற்றி போடுங்கள்.


மீண்டும் இதற்கு முன்பு வெளிவந்த (1966) ஒரு பொக்கிஷத்துடன் சந்திக்கிறேன் ( மறுபடியுமா ?....ф°∞ѣ∆√◊∙∙∏←∑ΨΨθω……)

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்